தெற்கு ரெயில்வேயில் முதன் முதலாக திருச்சியில் தண்டவாள எந்திர நவீன பணிமனை திறப்பு


தெற்கு ரெயில்வேயில் முதன் முதலாக திருச்சியில் தண்டவாள எந்திர நவீன பணிமனை திறப்பு
x
தினத்தந்தி 10 Jun 2019 10:45 PM GMT (Updated: 10 Jun 2019 7:46 PM GMT)

தெற்கு ரெயில்வேயில் முதன் முதலாக திருச்சியில் தண்டவாள எந்திர பராமரிப்பு பணிமனை திறக்கப்பட்டது.

திருச்சி,

ரெயில்கள் நல்ல முறையில் ஓடுவதற்கு தண்டவாள பாதை முக்கியமானதாகும். இந்த தண்டவாள பாதை சரியான முறையில் உள்ளதா? என்பதை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்வது உண்டு. மேலும் ஊழியர்கள் கண்காணித்து வருவார்கள். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த பணிக்கு நவீன எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எந்திரம் தண்டவாளங்களை சரிசெய்யவும், தண்டவாளங்களின் அருகே கிடக்கும் ஜல்லி கற்கள் மற்றும் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சிலிப்பர் கட்டைகளை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

தெற்கு ரெயில்வேயில் இந்த எந்திரம் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி கோட்ட ரெயில்வேயில் 6 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.

ரூ.5 கோடியில் பணிமனை

தண்டவாள எந்திரத்தை பராமரிப்பதற்காக சென்னை ராயபுரத்தில் பணிமனை உள்ளது. இந்த பணிமனை பழமையானது. இந்த நிலையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பணிமனை ஒன்றினை திருச்சியில் அமைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. திருச்சி குட்ஷெட் யார்டு அருகே இந்த பணிமனை ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தண்டவாள எந்திரத்தை பராமரிக்க பெரிய ெஷட் அமைக்கப்பட்டுள்ளது. ேமலும் அதிநவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த பணிமனையை ரெயில்வே வாரிய என்ஜினீயரிங் பிரிவு உறுப்பினர் விஸ்வேஷ் சவுபே ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் ஊழியர்கள் அறை, பொருட்கள், எந்திரங்கள் வைக்கும் அறையை அவர் திறந்து வைத்தார். வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

மதுரையில்...

இந்த பணிமனையின் உள்ளே தண்டவாள எந்திரத்தை கொண்டு வரும் வகையில் தனியாக தண்டவாள பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்மலை செல்லும் வழியில் தண்டவாளத்துடன் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. தண்டவாள பாதைகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது டிராலி வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது அதிநவீன வசதியுடன் கூடிய சிறிய டிராலி பயன்படுத்தப்பட உள்ளது. இதில் 2 அதிகாரிகள் அமரும் வகையில் இருக்கையும், அதனை இயக்குபவர் அமருவதற்கு தனியாக ஒரு இருக்கையும் உள்ளது. இந்த வாகனம் மோட்டார் மற்றும் எரிபொருள் மூலம் இயக்கப்பட உள்ளது.

இந்த பணிமனையில் திருச்சி கோட்டத்தில் உள்ள தண்டவாள எந்திரத்தை மட்டுமில்லாமல் தெற்கு ரெயில்வேயில் மற்ற கோட்டங்களில் பயன்படுத்தப்படும் தண்டவாள எந்திரங்களையும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும், தெற்கு ரெயில்வேயில் முதன் முதலாக இந்த பணிமனை திறக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் ஒரு பணிமனை அடுத்ததாக மதுரையில் திறக்கப்பட உள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக இந்த விழாவில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story