மதுரையில் பரிதாபம்: கிரிக்கெட் ஆடிய வாலிபர் திடீர் சாவு


மதுரையில் பரிதாபம்: கிரிக்கெட் ஆடிய வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2019 10:30 PM GMT (Updated: 10 Jun 2019 8:48 PM GMT)

மதுரையில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீரென்று இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

மதுரை காஜிமார் தெரு, பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29), நகை பட்டறை நடத்தி வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். நேற்று முன்தினம் காலையில் அவர் அவனியாபுரம் அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தார்.

அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். உடனே நண்பர்கள் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை ஆட்டோவில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, மணிகண்டன் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர். கிரிக்கெட் ஆடிய மணிகண்டன் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story