நெய்வேலி அருகே பரபரப்பு, ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் - கல்லூரி மாணவி தற்கொலை


நெய்வேலி அருகே பரபரப்பு, ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் - கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 11 Jun 2019 12:15 AM GMT (Updated: 10 Jun 2019 10:35 PM GMT)

நெய்வேலி அருகே ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் அவருடைய தாய்மாமன் மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவருடைய மகள் ராதிகா(வயது 22). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ராதிகாவின் புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டதாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் தனது படம் ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியானதால் அவமானம் தாங்க முடியாத ராதிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் துப்பட்டாவால் ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த ராதிகாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ராதிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ராதிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பார்வதிபுரத்தை சேர்ந்த ராதிகாவின் தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ்(21) என்பவர், ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விக்னேஷ், மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணி பகுதியில் தோப்பில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மந்தாரக்குப்பம் போலீசார் அங்கு சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story