பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலை? - ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு தகவல்


பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலை? - ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2019 9:30 PM GMT (Updated: 11 Jun 2019 7:28 PM GMT)

பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையா? என்பதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை ஆக இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதற்கு கர்நாடக ரெயில்வே பிரிவு போலீஸ் ஐ.ஜி.யும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான ரூபா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து முன்கூட்டியே கைதிகள் விடுதலை ஆக விதிமுறை உள்ளது. தற்போதைய வழக்கு (சசிகலா வழக்கு) இந்த விதிமுறையின் கீழ் வராது. எனவே, சிறை சட்டப்படி முன்கூட்டியே விடுதலை என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. என்பதும், இவர் தான் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதை அம்பலப்படுத்தியத்துடன், இந்த சொகுசு வசதி செய்துகொடுக்க அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதோடு, பல்வேறு சிறை முறைகேடுகளையும் வெளிக்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story