குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்வு


குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்வு
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 8:38 PM GMT)

குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 10 சென்டி மீட்டர் மழை பதிவானது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.

நாகர்கோவில்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி குமரி மாவட்டத்திலும் கடந்த 8-ந் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல் நேற்று காலையிலும் நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 15 நிமிடத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது.

நேற்று முன்தினம் மாலை வரை சாரல் மழையாக பெய்து கொண்டிருந்த தென்மேற்குப் பருவமழை, நேற்று முன்தினம் இரவில் இருந்து மிதமான மழையாக பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் பழையாறு உள்ளிட்ட ஆறுகளிலும், கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நாகர்கோவில் சபரி அணை, குமரி அணை போன்றவற்றில் மறுகால் பாய்ந்தது. திற்பரப்பு அருவியில் மழை வெள்ளம் கொட்டுவதால் அங்கு குளிக்க நேற்று காலையில் தடை விதிக்கப்பட்டது. மழை வெள்ளம் குறைந்ததும் மதியத்துக்கு மேல் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

5½ அடி உயர்வு

மழை தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1801 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதேபோல் பெருஞ்சாணி அணைக்கு 805 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 171 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 271 கன அடியும் ஆக இந்த 4 அணைகளிலும் மொத்தம் 3048 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலையில் தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. மழையின் காரணமாக முக்கடல் அணைக்கு தற்போது தண்ணீர் வரத்து ஏற்பட்டிருப்பதால் நேற்று காலை முதல் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 8.80 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 32.30 அடியாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இந்த அணையின் நீர்மட்டம் 26.75 அடியாக இருந்தது. ஒரே நாளில் இந்த அணையின் நீர்மட்டம் 5½ அடிக்கு மேலாக உயர்ந்துள்ளது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 6.69 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 6.79 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 42.98 அடியாகவும் இருந்தது. தற்போது அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Next Story