பாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை மைத்துனருக்கு வலைவீச்சு


பாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை மைத்துனருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2019 10:15 PM GMT (Updated: 11 Jun 2019 8:45 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட் டார். இதுதொடர்பாக அவருடைய மைத்துனரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மண்ணேரியை சேர்ந்த மாதப்பன் மகன் பாபா மணி (வயது35). இவர் பாப்பாரப்பட்டியில் சொந்தமாக ஆட்டோ வைத்து அவரே அதை ஓட்டி வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகள் செல்விக்கும் (30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

குடும்பத்தகராறு

கணவன், மனைவி இடையே கடந்த மாதம் குடும்பத்தகராறு ஏற்பட்டது. அப்போது பாபா மணி தனது மனைவி செல்வியை தாக்கினார். அப்போது அருகில் இருந்த செல்வியின் அக்காள் மாற்றுத்திறனாளியான பழனியம்மாள் (42) வந்து அதனை தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த பாபா மணி கத்தியால் பழனியம்மாளை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்குப்பதிந்து பாபா மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாபா மணி நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன் பின்னர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் பாபா மணி கையெழுத்திட பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து மாலை மோட்டார்சைக்கிளில் மண்ணேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் செல்வியின் தம்பியும் பட்டறை தொழிலாளியுமான மணிகண்டன் (32) நின்று கொண்டிருந்தார். அவர் பாபா மணியை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பாபா மணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாபா மணி பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபா மணி இறந்தார்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபா மணியின் மைத்துனர் மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story