திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் மாவட்ட கலெக்டர் போக்குவரத்தை சீர் செய்தார்


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் மாவட்ட கலெக்டர் போக்குவரத்தை சீர் செய்தார்
x
தினத்தந்தி 11 Jun 2019 9:45 PM GMT (Updated: 11 Jun 2019 9:26 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் மாவட்ட கலெக்டர் கதிரவன் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. இது தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திண்டுக்கல்– மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதனால் இந்த பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், அங்குள்ள வளைவுகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி பழுதாகி நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஹசன் நோக்கி தவிடு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. காலை 7 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 15–வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது லாரி பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் பண்ணாரி சோதனை சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த லாரிகள் அனைத்தும் ஆசனூர் சோதனை சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கதிரவன், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் நடைபெறும் ஜமாபந்தி முகாமுக்காக தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய காரும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கி கொண்டது.

இதனால் அவருடைய கார் மலைப்பாதையில் ஏற முடியாமலும், கீழே இறங்கி வர முடியாமலும் சிக்கி தவித்தது. இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழுதான லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்காக பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அங்கிருந்து 10 மணி அளவில் அப்புறப்படுத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

அப்போது திம்பம் மலைப்பாதையில் நின்று கொண்டிருந்த கலெக்டர் கதிரவன் தன்னுடைய காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாகன போக்குவரத்து சீரானதும், அவர் தன்னுடைய காரில் ஏறி தாளவாடியில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமுக்கு சென்றார்.


Next Story