ஆத்தூர் அருகே பயங்கரம் பெண் அடித்துக் கொலை திருமணம் செய்து வைக்காததால் மகன் ஆத்திரம்


ஆத்தூர் அருகே பயங்கரம் பெண் அடித்துக் கொலை திருமணம் செய்து வைக்காததால் மகன் ஆத்திரம்
x
தினத்தந்தி 12 Jun 2019 9:45 PM GMT (Updated: 12 Jun 2019 2:48 PM GMT)

ஆத்தூர் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் அவரது மகன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

ஆறுமுகநேரி, 

ஆத்தூர் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் அவரது மகன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
 
திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் வீரபுத்திரன். இவருடைய மனைவி நட்டாரம்மாள் (வயது 61). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வீரபுத்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நட்டாரம்மாள் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இதில் மூத்த மகன் முத்து வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணம் முடிந்து உள்ளூரில் கணவர் வீட்டாருடன் வசித்து வருகிறார். இளைய மகன் மாயாண்டி (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து விட்டுவந்து தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் தகராறு செய்து வந்தார்.

அடித்துக் கொலை 

இந்த நிலையில் நேற்று மாலையில் மாயாண்டி மது குடித்துவிட்டு வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது, திருமணம் செய்து வைக்கக்கோரி மீண்டும் தனது தாயாரிடம் தகராறு செய்தார். அதற்கு நட்டாரம்மாள், நீ குடித்துவிட்டு ஊரைச் சுற்றி வந்தால் யார் உனக்கு பெண் கொடுப்பார்கள்? என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாயாண்டி வெளியே கிடந்த கம்பை எடுத்து வந்து பெற்ற தாய் என்றும் பாராமல் அவரது தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் வீட்டுக்குள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாயாண்டி அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது நட்டாரம்மாள் பிணமாக கிடப்பதை பார்த்து ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

வலைவீச்சு 

போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நட்டாரம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாயாண்டியை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் மாயாண்டி மீது ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

ஆத்தூர் அருகே பெற்ற தாயை கம்பால் மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story