ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 6 பேர் மீது வழக்கு


ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 6:51 PM GMT)

அத்துமீறி ஓ.என்.ஜி.சி. கல்லைப்பிடுங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஆதிவிடங்கம் கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவரது 4 ஏக்கர் விவசாய நிலத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளது. மேலும், அந்த நிலத்தில் அந்த நிறுவனம் அளவீடு கல் ஒன்றையும் மண்ணில் பதித்து வைத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி அந்த நிலத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பதித்து வைக்கப்பட்டிருந்த கல்லை பிடுங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் எதுவும் செயல்படுத்தவில்லை என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. பாதுகாப்பு ஆய்வாளர் தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை, சேர்வைக்காரத்தெருவை சேர்ந்த விஜயரெங்கன் (வயது 56) வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் ஆதிவிடங்கம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் பதியப்பட்ட கல்லை பிடுங்கி பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அத்துமீறி கல்லை பிடுங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் பி.ஆர்.பாண்டியன், ஆலங்குடி சுப்பையன், ஊட்டியாணி பஞ்சநாதன், பின்னவாசல் கோவிந்தராஜ், ஆதிவிடங்கம் சம்மந்தம், கார்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடபாதிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story