கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள இளையனார்குப்பத்தில் புதிய பாலம் கட்டும்பணி தீவிரம்


கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள இளையனார்குப்பத்தில் புதிய பாலம் கட்டும்பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 7:47 PM GMT)

கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இளையனார்குப்பத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கல்பாக்கம்,

சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி வரை கல்பாக்கம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

கல்பாக்கம் அடுத்த இளையனார்குப்பம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கே பக்கிங்காம் துணை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மீது கடந்த 1974–ம் ஆண்டு பெரிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.

கடந்த 2015–ம் ஆண்டு பெய்த தொடர் மழையின்போது இந்த பாலத்தின் நடுப்பகுதி மற்றும் அடிப்புறத்தில் கீறல்கள் ஏற்பட்டு பெரும் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் இந்த பாலத்தின் அருகே தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர். பழுதடைந்த பழைய பாலம் தற்போது முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு அதே இடத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 2018–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த புதிய பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. விபத்தை குறைப்பதற்காக பாலத்தின் இருபுறமும் நடைபாதை அமைய உள்ளது. இந்த பணிகள் வருகிற 2020–ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story