நிலத்தடி நீர் திருட்டு லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


நிலத்தடி நீர் திருட்டு லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 7:47 PM GMT)

நிலத்தடி நீர் திருட்டு தொடர்பாக தண்ணீர் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை திருடி தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் நடுவீரப்பட்டு, புதுச்சேரி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. மேலும் இந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீர் லாரிகளை முற்றுகையிட்டு நடுவீரப்பட்டு கூட்டு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் குடிநீரை எடுத்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. நிலத்தடிநீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story