கீழடியில் 5–ம் கட்ட அகழாய்வு பணிகள்; அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஆய்வு


கீழடியில் 5–ம் கட்ட அகழாய்வு பணிகள்; அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 8:21 PM GMT)

திருப்புவனம் அருகே கீழடியில் 5–ம் கட்ட அகழாய்வு பணிகளை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆய்வு செய்ய உள்ளார்.

திருப்புவனம்,

தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் கடந்த 2017–18–ம் ஆண்டின் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழாய்வு செய்து தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பில் ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் 34 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 5 ஆயிரத்து 820 பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதில் பல வகையான கல் கண்ணாடிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள் உள்ளிட்ட பொருட்கள் எடுக்கப்பட்டது. குறிப்பாக வட இந்தியா பகுதிகளில் அதிகம் கிடைக்கும் சூசுபவளம், அகேட் ஆகிய வகை கல்மணிகள் அதிகஅளவில் கிடைத்துள்ளது.

கீழடியில் தொடர் அகழாய்வு மேற்கொண்டு தமிழர்கள் பண்டைய கால அரசியல், சமுதாய, பொருளாதார மேன்மைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் தமிழக அரசின் தொல்லியல்துறை கடந்த 2018–19–ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ள திட்டமிட்டு மத்திய, தொல்லியல் துறை ஆலோசனை குழுவின் அனுமதி பெறப்பட்டும், மாநில அரசின் சார்பில் ரூ.47லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 24–ந்தேதி தானியங்கி விமானம் மூலம் தொல்லியல் மேடுகள் கண்டறியும் பணிகள் நடைபெற்றும், கடந்த மாதம் 24–ந்தேதி முதல் ஜூன் மாதம் 6–ந்தேதி வரை மத்திய அரசின் இந்திய புவி காந்த விசையியல் நிறுவனம் மூலம் அகழாய்வு செய்வதற்குரிய இடம் தேர்வு செய்தும் பணிகள் நடைபெற்றன. இந்தாண்டு அகழாய்வு செய்ய முதன்மை பணிகள் நிறைவு பெற்று இந்த பணிகள் தொடக்க நிலையில் உள்ளது. இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.


Next Story