மார்த்தாண்டத்தில் சாலையில் தங்க டாலரை கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் உரியவரிடம் ஒப்படைக்க வாட்ஸ்-அப்பில் பரவ விட்டார்


மார்த்தாண்டத்தில் சாலையில் தங்க டாலரை கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் உரியவரிடம் ஒப்படைக்க வாட்ஸ்-அப்பில் பரவ விட்டார்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 9:02 PM GMT)

மார்த்தாண்டம் வெட்டுமணியில் சாலையில் கண்டெடுத்த தங்க டாலரை உரியவரிடம் ஒப்படைக்க வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை அப்பகுதியினர் பாராட்டி வருகிறார்கள்.

குழித்துறை,

மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் காலை தனது ஆட்டோவை வெட்டுமணி நிறுத்தத்தில் நிறுத்தி இருந்தார். பின்னர், அவர் அந்த பகுதியில் நடந்து சென்றார்.

மார்த்தாண்டம் பதிவாளர் அலுவலக பகுதியில் சென்ற போது சாலையில் ஒரு டாலர் கிடந்தது. அதை எடுத்து பார்த்த ராஜேஷ் வியந்தார்.

ஏனெனில் அது ஒரு பவுன் எடை உள்ள தங்க டாலர் என்பது தெரியவந்தது. மேலும், அந்த டாலரில் ஸ்டாலின், ரம்யா என்று ஆங்கிலத்தில் பெயரும், 7.1.05 என்றும், டாலரின் மத்தியில் சிலுவையும், பைபிளும், புறாவும் பொறிக்கப்பட்டு இருந்தது. அது பெண்ணின் தாலி சங்கிலியில் உள்ள டாலர் என்பது தெரிய வந்தது. பின்னர், அதை தனது நண்பர்களிடம் காட்டி விவரத்தை தெரிவித்தார். மேலும், அந்த டாலரை உரியவரிடம் ஒப்படைக்க விரும்பினார். இதற்காக ராஜேஷ், உடனே தனது செல்போனில் டாலரை புகைப்படம் எடுத்தார். அதைத்தொடர்ந்து அந்த படத்துடன் தனது செல்போன் எண்களான 99949 36443, 99407 05106 ஆகியவற்றையும் இணைத்து தனது வாட்ஸ்-அப்பில் பலருக்கு அனுப்பினார்.

ஆனால், டாலருக்கு யாரும் உரிமை கோரி வரவில்லை. யாரோ தவறவிட்ட தங்க டாலரை உரியவரிடம் ஒப்படைக்க வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை அப்பகுதியினர் பாராட்டி வருகிறார்கள்.

தங்க டாலரை கேட்டு யாரும் வரவில்லையென்றால், அதனை போலீசில் ஒப்படைக்க ஆட்டோ டிரைவர் முடிவு செய்துள்ளார்.

Next Story