என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேலும் ஒரு நாள் நீட்டிப்பு


என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 9:20 PM GMT)

என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் கடந்த மே மாதம் 2-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். மேலும் இணையதள வசதி இல்லாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

அந்த வகையில் குமரி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு வசதியாக நாகர்கோவில் இந்து கல்லூரியில் சேர்க்கை சேவை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

மேலும் ஒருநாள் நீட்டிப்பு

இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த 7-ந் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று 6-வது நாளாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. மொத்தம் 5 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.

ஆனால் இதில் 4 ஆயிரத்து 691 பேர் மட்டுமே வந்தனர். மேலும் 102 பேருக்கான விண்ணப்ப படிவங்கள் நிலுவையில் இருப்பதாலும், இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் நேற்றுடன் முடிவடைய இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story