பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு


பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 10:52 PM GMT)

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.1½ கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகமும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் கொடுவாய்-நாச்சிபாளையம் சாலை முதல் ஆண்டிபாளையம் சாலை வரை தார்சாலை அமைக்கும் பணியும், கண்டியன் கோவில் ஊராட்சி தாயம்பாளையத்தில் ரூ.5 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுபோல, தெற்கு அவினாசிபாளையத்தில் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் 10 கழிவறைகளும், வேலப்பன்கவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் தடுப்பணையும், புத்தரச்சல் பகுதியில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையமும், ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், நாதகவுன்டன்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் தார்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1 கோடியே 61 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் கால்நடைகளுக்கான நீர்த்தேக்க தொட்டியையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமே‌‌ஷ்குமார், செயற்பொறியாளர் பிரேம்குமார், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மகேஸ்வரன், மகேந்திரன் உள்பட தொடர்புடைய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story