பாளையங்கோட்டையில் பழுதடைந்த சாலையில் மரக்கன்றுகளை நட்டு தி.மு.க.வினர் நூதன போராட்டம்


பாளையங்கோட்டையில் பழுதடைந்த சாலையில் மரக்கன்றுகளை நட்டு தி.மு.க.வினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2019 9:30 PM GMT (Updated: 13 Jun 2019 12:41 PM GMT)

பாளையங்கோட்டையில் பழுதடைந்த சாலையில் மரக்கன்றுகளை நட்டு, தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் பழுதடைந்த சாலையில் மரக்கன்றுகளை நட்டு, தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டும், குழியுமான ரோடு 

நெல்லை மாநகராட்சி சார்பில், அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிக்காக, சாலையோரம் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலைகளின் குறுக்காகவும், பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.

பாளையங்கோட்டை சமாதானபுரம் ரவுண்டானா அருகில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. பின்னர் அங்கு சாலையை சீரமைக்காததால், குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் அதில் தண்ணீர் தேங்கியதால், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

நூதன போராட்டம் 

எனவே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவடைந்த பகுதியில், சேதம் அடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாளையங்கோட்டை சமாதானபுரம் ரவுண்டானா அருகில் பழுதடைந்த சாலையில் தி.மு.க.வினர் நேற்று மரக்கன்றுகளை நட்டு, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பவுல்ராஜ் தலைமை தாங்கினார். மாநகர விவசாய அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story