மத்திய அரசின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்


மத்திய அரசின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2019 9:45 PM GMT (Updated: 13 Jun 2019 3:42 PM GMT)

மத்திய அரசின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

மத்திய அரசின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகை 

இதுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசின் (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவது தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தகுதியான விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பெரும் விவசாயிகளும், பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் உரிய விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

விண்ணப்பங்களை கொடுக்கலாம்... 

விவசாய நிலங்கள் குறித்த ஆவணங்களுடன் ஆதார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ரே‌ஷன் கார்டு நகல், கைப்பேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். ஊக்கத்தொகை பெறும் விவசாயிகளின் பெயரில் பட்டா இருக்க வேண்டும் என்பதால் பட்டா மாறுதல் புது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 19–ந் தேதி நடைபெறும் ஜமாபந்தியில் அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

அனைத்து நிறுவன நில உரிமையாளர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அரசியல் பதவியில் வகிக்கும் விவசாய குடும்பங்கள், முன்னாள் மற்றும் தற்போதைய மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் இடம் பெற மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story