கே.வி.குப்பம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி


கே.வி.குப்பம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 5:31 PM GMT)

கே.வி.குப்பம் அருகே சிறு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடியாத்தம், 

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சி ஊராட்சியில் மலையடிவாரத்தை ஒட்டியபடி ஆயக்குளம் அருந்ததி காலனி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆயக்குளம் கிராமத்தில் இருந்து அருந்ததி காலனி செல்லும் சாலையில் கானாற்று ஓடை உள்ளது.

பள்ளத்தூர் ஏரியில் இருந்து லத்தேரி கம்பத்தம் ஏரிக்கு இந்த கானாற்று ஓடை செல்கிறது. மழைக்காலங்களில் இந்த கானாற்று ஓடையில் அதிக அளவில் வெள்ளம் சென்றால் ஆயக்குளம் அருந்ததி காலனியை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியாக வரமுடியாது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர்.

கானாற்று ஓடையில் வெள்ளம் செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிருஷ்ணாபுரம் வழியாக பல கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆயக்குளம் பகுதி பொதுமக்கள் கானாற்று ஓடையில் சிறு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து மனு அளித்து வந்தனர்.

இதுகுறித்து கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டார். இதனைதொடர்ந்து ஒருங்கிணைந்த வரி வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆயக்குளம் பகுதியில் சிறு மேம்பாலம் கட்ட அரசு உத்தரவு வழங்கியது.

அதைத் தொடர்ந்து நேற்று சிறுபாலம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தே.கோபி, ஒன்றிய உதவி பொறியாளர் பிரமிளா, கூட்டுறவு வங்கி தலைவர் டி.கோபி, அ.தி.மு.க. நிர்வாகிகள் சேட்டு, கன்னியப்பன், ரவி, மோகன், தினேஷ், சிவா, ஒப்பந்ததாரர் சீனு, ஊர் பிரமுகர் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 25 ஆண்டுகளாக சிறு மேம்பாலம் கட்டித்தரக்கோரி பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்து இருந்தோம். தற்போது சிறு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம் என்றனர்.

Next Story