திருச்சி முக்கொம்பில் இடிந்து விழுந்த மேலணையை ரூ.39 கோடியில் பலப்படுத்தும் பணி


திருச்சி முக்கொம்பில் இடிந்து விழுந்த மேலணையை ரூ.39 கோடியில் பலப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:38 PM GMT)

திருச்சி முக்கொம்பில் இடிந்து விழுந்த மேலணையை ரூ.39 கோடியில் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மேலணையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மதகுகள் உடைந்து, அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மேலணையில் 880 மீட்டர் நீளத்தில் ரூ.38 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப முறையில் அணையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் எம்.பாலாஜி நேற்று ேநரில் ஆய்வு செய்தார். முக்கொம்பு மேலணையில் நடைபெறும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களுடன் விரிவான ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னர் காப்பணை பணி மற்றும் புதிய ரெகுலேட்டர் கட்டுமான பணி ஆகியவற்றினை தள ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி தமிழக நீர் ஆதார வளர்ச்சிக்குழும தலைவர் ராஜகோபால், திருச்சி நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ராசு, ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story