பெரம்பலூரில் ரூ.9¼ கோடியில் போலீஸ் குடியிருப்புகள் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


பெரம்பலூரில் ரூ.9¼ கோடியில் போலீஸ் குடியிருப்புகள் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 7:42 PM GMT)

பெரம்பலூரில் ரூ.9¼ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர்,

தமிழக அரசின் உத்தரவின் பேரில், 2015-16-ம் நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 63 போலீசாருக்கு என மொத்தம் 76 பேருக்கு புதிதாக போலீஸ் குடியிருப்புகள் பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் ரூ.9 கோடியே 23 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் பெரம்பலூர் போலீஸ் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

கலெக்டர்- எம்.எல்.ஏ. பங்கேற்பு

இதையடுத்து கவுல்பாளையத்தில் நடந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா போலீஸ் குடியிருப்புகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் போலீசாருக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார். இதில் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், திருச்சி கோட்ட செயற்பொறியாளர் நாச்சிமுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரவீந்திரன் (பெரம்பலூர் சரகம்), தேவராஜ் (மங்களமேடு சரகம்), போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா, உதவி செயற்பொறியாளர்கள் திருமாறன், சக்தி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story