‘நீட்’ தேர்வை போலவே புதிய கல்வி கொள்கையையும் மத்திய அரசு திணிக்க பார்க்கிறது


‘நீட்’ தேர்வை போலவே புதிய கல்வி கொள்கையையும் மத்திய அரசு திணிக்க பார்க்கிறது
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 8:02 PM GMT)

‘நீட்’ தேர்வை போலவே புதிய கல்வி கொள்கையையும் திணிக்க மத்திய அரசு பார்க்கிறது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூறினார்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டமன்றத்தில், ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு அதனை ஏற்காதது மட்டுமல்லாமல், அனுப்பப்பட்ட தீர்மானம் எங்கே இருக்கிறது என்றே தனக்கு தெரியாது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். தமிழக அரசு, மாநில உரிமையை காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் ‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக தமிழக மாணவிகள் 4 பேர் இறந்து உள்ளனர்.

புதிய கல்வி கொள்கை

தற்போது மத்திய அரசு கல்வியை காவிமயமாக்கும் நோக்கோடு, அவசரமாக புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து அமலாக்குவதற்கு துடிக்கிறது. இந்த முயற்சியில் வெற்றி பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று தான் மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்ரிசான், மாநில கல்வி அமைச்சர்களுடைய கூட்டத்தை வருகிற 22-ந் தேதி கூட்டி இருப்பதாகும். இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கையை உறுதியாக செயல்படுத்த வேண்டும் என அவர் வற்புறுத்துவார் என தெரிகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதாவே ஆட்சியில் உள்ளது. அந்த மாநில கல்வி அமைச்சர்கள் புதிய கல்வி கொள்கையை அப்படியே ஏற்று கொள்வதாக அறிவிப்பார்கள். தென்மாநில அமைச்சர்களின் குரல்கள் எடுபடாது. பெரும்பான்மையான மாநிலங்கள் ஏற்று கொண்டன எனக்கூறி அக்கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு திணித்து விடும் ஆபத்து உள்ளது.

‘நீட்’ தேர்வை போலவே புதிய கல்வி கொள்கையையும் திணிக்க மத்திய அரசு பார்க் கிறது. எனவே, தமிழக கல்வி அமைச்சர் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வாதிட்டு வெற்றிபெற முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அந்த கல்வி கொள்கையை ஏற்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story