கரூர் அரசு கலைக்கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலெக்டர் ஆய்வு


கரூர் அரசு கலைக்கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:30 PM GMT (Updated: 13 Jun 2019 8:12 PM GMT)

கரூர் அரசு கலைக்கல்லூரியில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

கரூர்,

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடைபெற்று வரும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வுக்காக கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த சேவை மையத்தை கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் அடங்கிய வழிகாட்டி புத்தகங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடைபெற்று வரும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வுக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியில் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் 2-ம் கட்டமாக ஜூன் 6-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதிவரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி இந்த கால அவகாசம் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

விண்ணப்பம்

ஜூலை 3-ந்தேதி முதல் ஜூலை 28-ந்தேதி வரை நடைபெறவிருக்கும் இணையவழி விருப்பத்தேர்வு மற்றும் தங்களது தேர்வை உறுதி செய்தல் ஆகியவற்றை மாணவர்கள் வீட்டிலிருந்தோ அல்லது சேவை மையத்திலோ செய்து கொள்ளலாம். விண்ணப்பம் பதிவு செய்யhttps://www.theaonline.inஅல்லதுhttps://www.thdte.gov.in என்ற இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள கலந்தாய்வு சேவை மையத்தினை அணுகலாம்.

மாணவர்களின் வசதிக்காக கல்லூரி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்லவும், தடையில்லா மின்சாரம் மற்றும் இணையதள வசதி வழங்கவும், ஆன்லைன் மூலம் சரிபார்ப்பதற்கு 25 இடங்களில் மேஜை வசதிகள் செய்து கொடுப்பதற்காக தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, அரசு கலைக்கல்லூரியின் கணினித்துறை தலைவர் தங்கதுரை, பேராசிரியர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story