சென்னையில் நிரந்தரமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.7,600 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் 2 நிலையங்கள் விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது


சென்னையில் நிரந்தரமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.7,600 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் 2 நிலையங்கள் விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
x
தினத்தந்தி 13 Jun 2019 11:30 PM GMT (Updated: 13 Jun 2019 9:59 PM GMT)

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க ரூ.7,600 கோடி மதிப்பில் புதிதாக 2 கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 12 ஆயிரத்து 722 மில்லியன் கன அடி. ஆனால் தற்போது 626 மில்லியன் கனஅடி (5 சதவீதம்) மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.6 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. தற்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம், நெய்வேலியில் கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், வாடகை விவசாய கிணறுகள், சிக்கராயபுரம் கல்குவாரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் தினசரி 525 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய ரூ.233.72 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் நடந்துவருகிறது. நெய்வேலி நீர்படுகையில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட உள்ளது. நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்றில் இருந்து ரூ.6.67 கோடி மதிப்பில் 60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மூலம் 95 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது தினசரி 55 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிக்கராயபுரம் கல்குவாரியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரூ.11 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டு, 30 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி எடுக்கப்பட்டு வருகிறது. எருமையூர் கல்குவாரியில் ரூ.19.17 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் இங்கிருந்து 10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து வழங்க ரூ.53 கோடி மதிப்பில் பணிகள் நடந்துவருகிறது. இதில் இரட்டை ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டு தினசரி 10 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாக்கம் மற்றும் அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

இதுதவிர 358 புதிய ஆழ்துளை கிணறுகளில் 126 மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர 1,190 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது 128 சிறிய லாரிகள் மூலம் குறுகலான தெருக்களுக்கு 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த 10 நாட்களில் மேலும் 52 லாரிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுதவிர 64 தெருக்களில் உள்ள வீடுகளுக்கு அருகில் குடிநீர் வழங்கவும் புதிய முறைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

900 தண்ணீர் லாரிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு தினசரி 9,400 லாரி நடைகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் 6,500 நடைகள் இலவசமாகவும், 2,900 நடைகள் கட்டணம் மூலமும் வழங்கப்படுகிறது. குடிநீர் தொடர்பாக பொதுமக்கள் 044-45674567 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.

தற்போதுள்ள நிலையில் மழை பெய்யாவிட்டாலும் சென்னை மாநகருக்கு வருகிற நவம்பர் வரை தினசரி 525 மில்லியன் லிட்டர் குடிநீர் தங்குதடையின்றி வினியோகம் செய்ய முடியும். நெம்மேலியில் கூடுதலாக ரூ.1,689.35 கோடி மதிப்பில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஆணை கடந்த மாதம் 25-ந் தேதி வழங்கப்பட்டது. இதுதவிர நெம்மேலியில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் 400 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்தால் 760 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

வருங்காலத்தில் தண்ணீர் தேவையை முழுமையாக பெறுவதற்காக கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் ஆதாரங்கள் மூலம் 1,500 மில்லியன் லிட்டர் குடிநீர் கையிருப்பு இருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. இவைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக தீர்க்கப்படும்.

மாநிலம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினசரி 1,880 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிகரன், செயல் இயக்குனர் டாக்டர் பிரபுசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story