குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - மேல்மலையனூர் அருகே பரபரப்பு


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - மேல்மலையனூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 9:45 PM GMT (Updated: 13 Jun 2019 11:32 PM GMT)

மேல்மலையனூர் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே மல்லாண்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மினிகுடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுக்குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டதால், கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மதியம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலி பேக், சீனுவாசன், வளத்தி இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story