கடலோர பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு, நீண்ட நேரம் காத்திருந்து ஊற்றுகளில் தண்ணீர் எடுத்துச்செல்லும் பொதுமக்கள்


கடலோர பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு, நீண்ட நேரம் காத்திருந்து ஊற்றுகளில் தண்ணீர் எடுத்துச்செல்லும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:15 PM GMT (Updated: 14 Jun 2019 5:43 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து ஊற்றுகளில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.

கோட்டைப்பட்டினம்,

தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளதால், வறட்சி பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் குளங்களும், ஏரிகளும் வறண்டு காணப்படுகின்றன. கோடை வெயில் கடுமையாக இருப்பதாலும், போதிய மழை இல்லாததாலும் விவசாய நிலங்கள் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. கால்நடைகளும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தின் கடலோர பகுதியான கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான பல கிராமங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள மணமேல்குடியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

இந்த பகுதிகளில் பல இடங்களில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீரும் குடிப்பதற்கு ஏதுவாக இல்லாததால், ெபாதுமக்கள் அதை வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் கிராம ஊராட்சிகளில் சரியாக தண்ணீர் திறந்து விடுவது கிடையாது. இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சரக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் குடிநீரை ஒரு குடம் ரூ.10 என விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

கட்டுமாவடி, காரக்கோட்டை, பிள்ளையார்திடல், மணமேல்குடி, அம்மாப்பட்டினம், விச்சூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, அதை சரக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆழ்துளை கிணறுகளிலும் நீர் வற்றி உள்ளதால், தனியார் குடிநீர் விற்பனை நிலையங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மீமிசல், அரசநகரிப்பட்டினம், முத்துக்குடா, ஆர்.புதுப்பட்டினம் போன்ற பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது.

கடலோர பகுதிகளில் கிணறு போன்ற சிறிய வகையான ஊற்றுக்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் தண்ணீர் எடுத்துச்செல்ல சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் நடந்து வருகின்றனர். இந்த ஊற்றுக்களிலும் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தண்ணீர் ஊறிய பிறகு அந்த தண்ணீரை எடுத்து செல்லும் நிலையில் உள்ளனர்.

எனவே தமிழக அரசு கடலோர பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும் எனவும், கிராம ஊராட்சிகளில் தினமும் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story