முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 61,495 பேருக்கு அறுவை சிகிச்சை கலெக்டர் மலர்விழி தகவல்


முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 61,495 பேருக்கு அறுவை சிகிச்சை கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 6:52 PM GMT)

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 61,495 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

தர்மபுரி,

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தமிழக மக்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 5 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 11 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 16 ஆஸ்பத்திரிகளில் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையும், குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. 16 ஆஸ்பத்திரிகளில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை உள்பட 1,051 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் அமைந்து உள்ளது. கூடுதலாக 157 தொடர் சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கி உள்ளது. 163 சிகிச்சைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சியோகிராம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சிடிஸ்கேன், மெமோகிராம் பரிசோதனை என 38 வகையான நோய்களுக்கு பரிசோதனை செய்யும் செலவுகளை ஈடுகட்டும் வகையிலும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற திட்டமாக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி முதல் இந்த ஆண்டு மே மாதம் 31-ந்தேதி வரை 61,495 பயனாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.124 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 170 செலவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் உரிய முறையில் விண்ணப்பித்து திட்ட அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story