சுவாமிமலை அருகே பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்து கொல்ல முயற்சி கணவன் கைது


சுவாமிமலை அருகே பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்து கொல்ல முயற்சி கணவன் கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 9:09 PM GMT)

சுவாமிமலை அருகே பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கபிஸ்தலம், 

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே கீழமாத்தியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் ராஜகுரு(வயது26).விவசாயி.

இவருக்கு சுவாமிமலை அருகே உள்ள ஆணைக்காரன்பட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மகாலெட்சுமி(22) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.ராஜகுருவுக்கும், மகாலெட்சுமிக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு குடும்பதகராறு ஏற்பட்டு பிரிந்து அவர்களது பெற்றோர் வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி ராஜகுரு, தனது மனைவி மகாலெட்சுமியிடம் நமக்கு திருமணம் செய்து வைத்தவர் கும்பகோணத்தை அடுத்த பரட்டை கிராமத்தில் உள்ளார். அவரிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி பிரிந்து விடுவோம் என்று கூறி, பரட்டை கிராமத்துக்கு அழைத்து சென்றார். அப்போது அசூர் பைபாஸ் சாலை அருகே சென்ற போது, ராஜகுரு தனது மனைவி மகாலெட்சுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் அவரது கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அலறிதுடித்த மகாலெட்சுமியை அவர் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். கழுத்து அறுக்கப்பட்டதில் படுகாயமடைந்த மகாலெட்சுமி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ குருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மறைவான பகுதிக்கு பெண்ணை அழைத்து சென்று அவரது கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story