மாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசிய பா.ரஞ்சித்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசிய பா.ரஞ்சித்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 9:47 PM GMT)

மாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ரஞ்சித் உருவப்பொம்மையை எரிக்க முயன்ற 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தை கண்டிப்பதுடன், அவரை உடனடியாக காலம் தாழ்த்தாமல் கைது செய்ய கோரியும், தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தஞ்சை ரெயிலடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

போலீசாரின் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ், மாநில அமைப்புக்குழு செயலாளர் ஆசைதம்பி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஆன்மிக மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், வீரத்தமிழர் எழுச்சி பேரவையின் நிறுவன தலைவர் வீரன்.செல்வராசு உள்பட பல இந்து அமைப்பினர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங் களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள், பா.ரஞ்சித் உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர். ஆனால் போலீசார் உருவப்பொம்மையை எரிக்க விடாமல் அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீ சாரின் தடையை மீறி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டதுடன் உருவப்பொம்மையை எரிக்க முயன்ற 32 பேரை தஞ்சை மேற்கு போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

Next Story