மீஞ்சூர் அருகே ரூ.15 கோடி அரசு நிலம் மீட்பு


மீஞ்சூர் அருகே ரூ.15 கோடி அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 15 Jun 2019 10:15 PM GMT (Updated: 15 Jun 2019 8:12 PM GMT)

மீஞ்சூர் அருகே ரூ.15 கோடி அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த காட்டூர் பகுதியில் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 152 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இறால் பண்ணைகள் அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு புகார் செய்திருந்தனர்.

இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர் தேவன் ஆகியோர் அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர்.

அங்கு 35 ஏக்கர் நிலத்தில் இறால் பண்ணைகள் அமைத்து இருப்பதும், அங்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் மீஞ்சூர் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் கட்டிடங்கள் மற்றும் இறால் பண்ணை அமைத்துள்ள கரைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.ரூ.15 கோடி மதிப்பிலான 35 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

Next Story