முதியோர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்


முதியோர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jun 2019 10:45 PM GMT (Updated: 15 Jun 2019 8:12 PM GMT)

முதியோர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை,

60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் ஜனத்தொகையானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, நல்ல ஊட்ட சத்தான உணவு ஆகியவற்றால் தனிப்பட்ட மனிதனின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு வருவதால், 2050-ம் ஆண்டில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் மக்கள் தொகை 14 சதவீதம் உயரும் என கணக்கிடப்பட்டு உள்ளது. மக்கள் தொகையில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை நம்மை மகிழ்ச்சியடைய செய்தாலும், வயது நிமித்தமாக ஏற்படும் தள்ளாமை மற்றும் இயலாமையை சோர்வின்றி உரிய வகையில் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு உள்ளது.

முதியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்கள் பாதுகாப்பான, கவுரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில், தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின்படி, ஆதரவற்ற முதியோரை பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல் போன்றவற்றை அரசு தற்பொழுது சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

முதியோர் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, உடைந்து போன கூட்டு குடும்பம், பொருளாதார பற்றாக்குறை மற்றும் மேல்நாட்டு கலாசாரத்தின் சீரழிவு போன்றவை முதியவர்களின் மீதான அக்கறையை குறைக்கின்றது. எனவே முதியோர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இது தொடர்பாக முதியோர்கள் கட்டணமில்லா 1253 என்ற உதவி தொலைபேசி சென்னையிலும், 18008001253 என்ற தொலைபேசி எண்ணில் ஏனைய தமிழக மாவட்டங்களிலும், சட்டம் மற்றும் மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் சேர்க்கை, முதியோர் பாதுகாப்பு சட்டம் 2007 பற்றிய தகவல்கள் பெற உதவலாம். ஆகவே நாம் முதியவர்களின் தேவை உணர்ந்து அவர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளித்திட உலக முதியோர் வன் கொடுமை விழிப்புணர்வு நாளில் முதியோருக்கு உதவிட சூளுரை ஏற்போம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story