தடை காலத்துக்குப்பின் கடலுக்கு சென்ற தஞ்சை மீனவர்கள்: மீன்கள் குறைந்த அளவே சிக்கியதால் ஏமாற்றம்


தடை காலத்துக்குப்பின் கடலுக்கு சென்ற தஞ்சை மீனவர்கள்: மீன்கள் குறைந்த அளவே சிக்கியதால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 16 Jun 2019 10:45 PM GMT (Updated: 16 Jun 2019 6:45 PM GMT)

தடை காலத்துக்குப்பின் கடலுக்கு சென்ற தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் சிக்கின. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 286 விசைப்படகுகள் இருந்தன. இதில் பல படகுகள் கஜா புயலில் சேதம் அடைந்தன. தற்போது 115 படகுகள் மட்டுமே உள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த பின்னர் கடந்த 14-ந் தேதி நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மொத்தம் 78 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை மீனவர்கள் கரை திரும்பினர். தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற நிலையில் அதிக அளவு மீன்கள் சிக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இறால்களும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

இதுகுறித்து தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:-

கஜா புயலால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு பின்னர் தடை காலத்தில் அதிக செலவு செய்து படகை மராமத்து செய்தோம். தடை காலம் முடிந்த நிலையில் ஒரு படகுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றதால் படகு ஒன்றிற்கு 200 கிலோ வரை இறால் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் 50 கிலோ முதல் 100 கிலோ வரை தான் இறால்கள் சிக்கின. இதற்கு போதுமான மழை இல்லாததே காரணம். மீன்களும் குறைந்த அளவே சிக்கின. எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்காததால் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story