பெங்களூருவில் முதல்-மந்திரி இல்லத்தை நோக்கி பா.ஜனதா ஊர்வலம் எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கைது


பெங்களூருவில் முதல்-மந்திரி இல்லத்தை நோக்கி பா.ஜனதா ஊர்வலம் எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கைது
x
தினத்தந்தி 16 Jun 2019 11:30 PM GMT (Updated: 16 Jun 2019 8:22 PM GMT)

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவை வாபஸ் பெற கோரி பெங்களூருவில் முதல்-மந்திரி இல்லத்தை நோக்கி பா.ஜனதா ஊர்வலம் நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற எடியூரப்பா உள்பட அக்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு, 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அரசு தனது முடிவை வாபஸ் பெறக் கோரி அக்கட்சி சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் 48 மணி நேர தொடர் தர்ணா போராட்டத்தை பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தொடங்கியது.

இரண்டு இரவு, இரண்டு பகல் முழுவதும் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எல்.எல்.சி.க்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த தொடர் தர்ணா போராட்டம் நேற்று காலை 11 மணியுடன் நிறைவடைந்தது. இறுதியாக குமரகிருபா ரோட்டில் உள்ள முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தை முற்றுகையிட எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினர் ஊர்வலமாக சென்றனர். இதில் அக்கட்சி கொடிகளுடன் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதாவினரை போலீசார் பாதியிலேயே இடைமறித்தனர். எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜிந்தால் நிறுவனத்திற்கு எக்காரணம் கொண்டும், அரசு நிலத்தை விற்பனை செய்யக்கூடாது. இந்த அரசு மக்களின் கண்களில் மண்ணை வாரி இறைக்க முயற்சி செய்கிறது. விவாதத்திற்கு வருமாறு குமாரசாமி அழைத்துள்ளார். அவருடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது.

இது குமாரசாமிக்கு எதிரான போராட்டம் அல்ல. மக்களின் நீதிக்காக நடைபெறும் போராட்டம். ஜிந்தால் நிறுவனத்தில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக பகல்-இரவாக தர்ணா போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

அரசின் முடிவை கண்டித்து முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தை முற்றுகையிடுகிறோம். இனி இந்த கூட்டணி அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ேதர்தலில் தோல்வி அடைந்ததால் குமாரசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் குமாரசாமி ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். வறட்சி நிவாரண பணிகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஏரி-குளங்களில் தூர் வார இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த பணியை இந்த அரசு செய்யவில்லை. அரசின் தவறுகளை ஊடகங்கள் எடுத்துக் கூறுகின்றன. அதை சரிசெய்து கொள்ளாமல், ஊடகங்களை குமாரசாமி குறை சொல்வது சரியல்ல.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களை போலீசார் மாலையில் விடுவித்தனர்.

Next Story