கெங்கவல்லி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை


கெங்கவல்லி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 8:48 PM GMT)

கெங்கவல்லி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் வசித்து வந்தவர் கந்தசாமி (வயது 70), விவசாயி. இவருடைய மனைவி கந்தாயி. இவர்களுக்கு பரந்தாமன், சின்னசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். கந்தசாமியின் பக்கத்து தோட்டத்தை உறவினரான மாரப்பன் என்பவர் பராமரித்து வந்தார். இவர்கள் 2 பேரின் தோட்டத்துக்கு நடுவில் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலையில் மாரப்பன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது சொந்த செலவில் அரசு புறம்போக்கு நிலத்தில் பயிர் செய்து வந்தார்.

இதனை அறிந்த கந்தசாமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிவில், அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் கையகப்படுத்திட ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பேரில், மாரப்பன் பயிர் செய்து வந்த அரசு புறம்போக்கு நிலத்தை கெங்கவல்லி வருவாய்த்துறையினர் கையகப்படுத்தினர். கந்தசாமி வழக்கு தொடர்ந்ததால் தான், தனக்கு இந்த இடம் போய்விட்டது என்று மாரப்பன் ஆத்திரம் அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கந்தசாமி, 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை தனது விவசாய தோட்டத்தின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மாரப்பன் கையில் கொடுவாளுடன் வந்தார். அவர் தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கந்தசாமியின் கழுத்தை கொடுவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கந்தசாமி இறந்தார். உடனே மாரப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைேய ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த விவசாயியின் உறவினர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரசு புறம்போக்கு நிலம் கைவிட்டு போன ஆத்திரத்தில் விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story