மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2019 10:15 PM GMT (Updated: 17 Jun 2019 10:17 PM GMT)

மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி,

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்த விசாரணை ராமநாதபுரத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இடம்பெற்று உள்ளனர். அந்த ஆணைய விசாரணையின்போது, குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். புகார்தாரர்கள் ஆணையத்திடம் நேரிலும் மனு கொடுக்கலாம்.

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் விவரமும் பெறப்பட்டு உள்ளது. அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிகுடியிருப்பு காமராஜ் உயர்நிலைப்பள்ளி, காலாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மேல்நிலை பள்ளியாகவும், தோழப்பன்பண்ணை அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய நீர் இருப்பு நிலவரப்படி ஆகஸ்டு மாதம் முதல் வாரம் வரை குடிநீர் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை. பருவமழை தொடங்கி இருப்பதால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விவசாயத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறை மூலம் அரசுக்கு பரிந்துரை அனுப்பி, அரசு உத்தரவிட்ட பிறகு தண்ணீர் திறக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆலந்தலையில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது அமைக்கப்படவில்லை. வேப்பலோடை பகுதியில் 60 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் அரசு விதிமுறைப்படி 24 மீட்டர் நீளத்துக்குள்ளும், 240 குதிரை திறன் கொண்ட என்ஜினும் உள்ள படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. 67 படகுகள் 24 மீட்டர் நீளத்துக்கு அதிகமாக உள்ளன. இதில் 16 விசைப்படகு உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான உபகரணங்கள் வாங்கி உள்ளனர். இந்த படகுகளில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்த படகுகளுக்கு நிரந்தர பதிவு எண் வழங்குவதற்கு 15 நாட்கள் ஆகும். மற்ற படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டர்கள் போராட்டத்தால் எந்த பணியும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், டவுன்பஸ்கள் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் இருந்தும் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story