மேம்பாலத்தில் தூக்குப்போட்டு சினிமா கலைஞர் தற்கொலை


மேம்பாலத்தில் தூக்குப்போட்டு சினிமா கலைஞர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2019 11:15 PM GMT (Updated: 17 Jun 2019 10:19 PM GMT)

மேம்பாலத்தில் தூக்குப்போட்டு, சினிமா கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நேருஜிநகரில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. நேற்று காலை, மேம்பால கம்பியில் தூக்குப்போட்ட நிலையில், ஒரு ஆண் பிணம் தொங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தூக்கில் தொங்கிய நபர் பேண்ட் மட்டுமே அணிந்து இருந்தார். தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி, மேம்பாலத்தின் கம்பியில் கட்டி தூக்குப்போடப்பட்டு இருந்தது. பின்னர் மேம்பால கம்பியில் தூக்கில் தொங்கிய உடலை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

இதையடுத்து பிணமாக தொங்கியவரின் பேண்ட் பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்து ஒரு செல்போனை போலீசார் கண்டெடுத்தனர். அந்த செல்போன் மூலம் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் துப்புத்துலக்கினர்.

செல்போனில் ஏற்கனவே பேசியிருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் போடி ரெங்கநாதபுரம் அம்பேத்கர்தெருவை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பது தெரியவந்தது. இவர், சென்னையில் சினிமா நடிகர்களுக்கு ஒப்பனை செய்யும் கலைஞராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

விசாரணையில், கணேசனின் மகன் விஜய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்காக கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதில் இருந்தே அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு போடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். மனஉளைச்சலில் இருந்த அவர், தனது சட்டையை கழற்றி மேம்பால கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

Next Story