பெருந்துறை அருகே உடலில் டெஸ்டர் வைத்து உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு


பெருந்துறை அருகே உடலில் டெஸ்டர் வைத்து உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2019 11:30 PM GMT (Updated: 17 Jun 2019 10:38 PM GMT)

பெருந்துறை அருகே உடலில் டெஸ்டர் வைத்து உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு செய்தார்.

பெருந்துறை,

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உயர்மின் கோபுரங்கள் அருகே வசித்தாலோ, அதன்கீழ் விவசாய பணிகளில் ஈடுபட்டாலோ மின்காந்த புலன் பாய்ந்து பாதிப்புகள் ஏற்படும் என்று புகார் கூறி வருகிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஈரோடு தொகுதி கணேசமூர்த்தி எம்.பி. நேற்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று ஆய்வு செய்தார். அப்போது உயர்மின் கோபுரத்தின் கீழ் பகுதியில் மின்சாரம் பாய்கிறதா? என்பதை கண்டறிய தன்னுடைய உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தார். உடனே டெஸ்டரில் இருந்த விளக்கு ஒளிர்ந்து மின்சாரம் பாய்கிறது என்பதை காட்டியது. பின்னர் அதே இடத்தில் அவர் ஒரு உறுதி மொழி பத்திரத்தையும் தயாரித்தார். புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது. இதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காட்டி பேசுவேன்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சரிடமும் இதை கொண்டு செல்லப்போகிறேன்‘ என்றார்.

Next Story