போரூர் சுங்கச்சாவடி அருகே கன்டெய்னர் லாரி-கார் மோதல்; நண்பருடன் டிரைவர் பலி


போரூர் சுங்கச்சாவடி அருகே கன்டெய்னர் லாரி-கார் மோதல்; நண்பருடன் டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2019 11:15 PM GMT (Updated: 18 Jun 2019 6:22 PM GMT)

போரூர் சுங்கச்சாவடி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி நண்பருடன் டிரைவர் பலியானார். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தவர் செல்வகணேஷ் (வயது 21). கார் டிரைவர். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம். இவரது நண்பர்கள் சரண்கிஷோர் (21), பிரவீன்குமார் (21), அஜித் (19).

இந்தநிலையில் நேற்று காலை செல்வகணேஷ் தனக்கு சொந்தமான காரில் 3 நண்பர்களையும் ஏற்றிக்கொண்டு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-புழல் நெடுஞ்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி அருகே கார் சென்றது.

அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென சாலையின் வலதுபுறம் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி காரை ஓட்டி வந்த செல்வகணேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சரண்கிஷோரை மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story