கடன் தொகையை செலுத்திய பின்பும் அடகு வைத்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி; நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு


கடன் தொகையை செலுத்திய பின்பும் அடகு வைத்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி; நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jun 2019 10:45 PM GMT (Updated: 18 Jun 2019 8:52 PM GMT)

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடகு வைத்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி,

பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன். இவர் தேனி யில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றார். இதற்கு அடமானமாக இவர் தனது வீட்டு பத்திரத்தை பதிவு செய்து கொடுத்தார்.

வாங்கிய கடனுக்கு தவணை முறையில் பணத்தை திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 250-ஐ ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் பணியாளர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் வாங்கிய பணத்தை முழுவதும் செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நிதி நிறுவனத்தினரிடம் சென்று தனது பத்திரத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு உள்ளார். அப்போது அங்கு இருந்த மேலாளர் தமிழன், ஊழியர் மன்மதன் ஆகியோர் கூரியர் மூலம் பத்திரத்தை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால், பத்திரம் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் பணம் செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனத்தில் இருந்து அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் முருகேசன் புகார் செய்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தேனி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழன், மன்மதன் ஆகிய 2 பேர் மீதும் தேனி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story