உள்ளாடையில் மறைத்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் தங்கம் பறிமுதல் ஆந்திராவை சேர்ந்தவர் கைது


உள்ளாடையில் மறைத்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் தங்கம் பறிமுதல் ஆந்திராவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2019 10:32 PM GMT (Updated: 18 Jun 2019 10:32 PM GMT)

மீன்பிடிக்கும் கருவி, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து பக்ரைன் வழியாக விமானம் வந்தது.

இந்த விமானத்தில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த முகமதுஉசேன் ஷேக் (வயது 51) என்பவர் வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது மீன்பிடிக்கும் கருவி இருந்தது. அதை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதில் 10 தங்கக்கட்டிகளும், 28 தங்க துண்டுகளும் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். ரூ.34 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஷேக் அப்துல்லா (34), ராமநாதபுரத்தை சேர்ந்த பார்த்திபன் (31) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

பின்னர் 2 பேரையும் தனியறையில் சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 351 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மொத்தம் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 351 கிராம் தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவை சேர்ந்த முகமது உசேன் ஷேக்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story