குடகனாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு: பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


குடகனாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு: பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 5:30 PM GMT)

வேடசந்தூர் அருகே குடகனாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாத நிலையில் அணை மற்றும் ஆறு வறண்டுள்ளது. நேற்று காலை திண்டுக்கல்லில் இருந்து பொக்லைன் எந்திரங்கள், 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளுடன் சிலர் வந்தனர்.

குடகனாறு அருகே வந்தபோது, கருப்பத்தேவனூர் கிராம மக்கள், பா.ஜனதா கட்சி வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர் சதாசிவம் தலைமையில் அனைத்து வாகனங்களையும் குடகனாற்றுக் குள் செல்ல முடியாத வகையில் அவற்றை சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு கூம்பூர் போலீசார் மற்றும் அதிரடிபடை போலீசாரும் விரைந்து வந்து மணல் எடுக்க வந்த கும்பலிடம் விசாரித்தபோது வண்டல் மண் எடுப்பதற்கான கனிமவளத்துறை அனுமதி கடிதம் இருந்தது. இருப்பினும் வண்டல் மண் எடுப்பதாக கூறி குடகனாற்றில் மணல் அள்ளுவதாக கூறி கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.கிராம மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அனைத்து வாகனங்களையும் எடுத்து கொண்டு அவர்கள் திரும்பி சென்றனர். மேலும் குடகனாற்றில் மணல் அள்ளுவது தெரியவந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story