சிவகங்கை அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு


சிவகங்கை அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
x
தினத்தந்தி 20 Jun 2019 12:00 AM GMT (Updated: 19 Jun 2019 9:27 PM GMT)

திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் மர்மமாக இறந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டை கருதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது 2-வது மகள் ராஜாத்தி (வயது 26). இவருக்கும், கல்லலை அடுத்த பாகாடி கிராமத்தை சேர்ந்த செல்வமணி (30) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜாத்தி பாகாடியில் உள்ள தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகளுக்கு 32 பவுன் நகை, ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சீதனமாக கொடுத்தேன். ஆனாலும் அவளது கணவர் வீட்டார் மேலும் நகை மற்றும் கார் வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தினர்.

எனவே எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி செல்வமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கல்லல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து ராஜாத்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் இறந்து போன ராஜாத்தியின் உறவினர்கள் இந்த சம்பவத்தில் செல்வமணியின் குடும்பத்தினரை கைது செய்யக்கோரியும், உடலை வாங்க மறுத்தும் சிவகங்கை-மானாமதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் நடவடிக்கை எடுத்த பின்னர் தான் உடலை வாங்க முடியும் என்று கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story