சப்பாணிப்பட்டியில் டிபன் கடைக்காரர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


சப்பாணிப்பட்டியில் டிபன் கடைக்காரர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Jun 2019 10:45 PM GMT (Updated: 20 Jun 2019 4:46 PM GMT)

சப்பாணிப்பட்டியில் டிபன் கடைக்காரர் வீட்டில் 15 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணம்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டி மசூதி தெருவை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி மஞ்சுளா (வயது 40). டிபன் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். அப்போது வீட்டு சாவியை வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த மர்ம ஆசாமிகள் அங்கு சென்று பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகளை திருடி சென்றனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் வீடு திரும்பிய மஞ்சுளா கதவு திறக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story