நில அளவை சான்று வழங்க லஞ்சம்: அதிர்ச்சியில், விவசாயி சாவு திருவிடைமருதூர் அருகே பரிதாபம்


நில அளவை சான்று வழங்க லஞ்சம்: அதிர்ச்சியில், விவசாயி சாவு திருவிடைமருதூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 20 Jun 2019 6:54 PM GMT)

திருவிடைமருதூர் அருகே நில அளவை சான்று வழங்க லஞ்சம் கேட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் தட்டார தெருவை சேர்ந்தவர் தனசேகர்(வயது 48). விவசாயியான இவர், கியாஸ் வெல்டிங் தொழிலும் செய்து வந்தார். தனக்கு சொந்தமான இடத்தில் இவர் வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக நிலத்தை அளக்க கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தார்.

இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி, சர்வேயர், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் தனசேகருக்கு சொந்தமான இடத்துக்கு நேற்று சென்று நிலத்தை அளந்தனர். பின்னர் தனசேகரை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வரும்படி அழைத்து சென்ற அதிகாரிகள், நில அளவை சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தன்னிடம் ரூ.6 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறிய தனசேகர், பணத்தை கொடுத்தபோது மீதம் உள்ள ரூ.4 ஆயிரத்தை தந்தால் தான் நில அளவை சான்று வழங்குவோம் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இதனால் சான்று கிடைக்காதோ? என்ற அதிர்ச்சியில் தனசேகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, கிராம நிர்வாக அலுவலகத்திலேயே சுருண்டு விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தனசேகரை உடனடியாக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்தபோது தனசேகர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதுபற்றி அவருடைய மகன் சுதர்சன் திருவிடைமருதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story