குடகனாறு அணையில் மணல் திருட்டு - கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு


குடகனாறு அணையில் மணல் திருட்டு - கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 5:51 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் குடகனாறு அணையில் மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. இந்த அணையில் வண்டல் மண் எடுக்க கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்று, மணல் திருடுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் பொக்லைன் எந்திரங்கள், 10-க்கும் மேற்பட்ட லாரிகளுடன் அணை பகுதிக்கு வந்தது. இதை அறிந்த கருப்பதேவனூர் மக்கள் திரண்டு சென்று அவர் களை தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே நேற்றும் மணல் அள்ளுவதற்காக ஒரு கும்பல் வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர் சதாசிவம் தலைமையில் கருப்பதேவனூர், அடைக்கனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தடுப்பதற்காக அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிக்குமார், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது ஏற்கனவே குடகனாற்றில் மணல் அள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையே அணையில் வண்டல் எடுப்பதாக கூறி, மணல் அள்ளினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். எனவே, மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள், பொதுமக்களுடன் சென்று வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஜமாபந்தி நடைபெறுவதால் அளவீடு செய்ய நிலஅளவையர் வரமுடியவில்லை என்றும், மற்றொரு நாளில் அளவீடு செய்த பின்னரே வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story