போரில் இறந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்சிலை; சிவகங்கை அருகே கண்டெடுப்பு


போரில் இறந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்சிலை; சிவகங்கை அருகே கண்டெடுப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 10:29 PM GMT)

சிவகங்கை அருகே போரில் இறந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,

17 மற்றும் 18-ம் நூற்றாண்டில் போரில் இறந்த வீரர்களின் நினைவாக கல்தூண் அமைக்கப்பட்டது. இந்த கல்தூணை நடுகல் என்று அழைப்பார்கள். இதுபோன்ற ஒரு கல் சிலை சிவகங்கையை அடுத்த பில்லூர் அருகே உள்ள அழுபிள்ளைதாங்கி என்ற இடத்தில் கண்ெடடுக்கப்பட்டுள்ளது.

கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா இதுகுறித்து கூறியதாவது:-

நடுகற்சிலை பற்றி தொல்காப்பியத்திலும், சங்க இலக்கிய பாடல்களிலும் விவரித்துக் கூறுகின்றன. சிவகங்கை ஒன்றியம், பில்லூரை அடுத்த அழுபிள்ளைதாங்கி எனும் குடியிருப்பு பகுதியை ஒட்டிய காட்டுப்பகுதியில் 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த நடுகற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல், போரில் இறந்த வீரர்களை குறிப்பதாகும், நடுகல் வீரனின் சிலையில் வீரன் கையில் வில் அம்பு ஏந்திய நிலையில், ஒருகை வில் தண்டையும், மறுகை நாணில் அம்பேற்றிய நிலையிலும் உள்ளது. வீரனின் முதுகு பகுதியில் அம்புகள் வைக்கும் கூடையும் காணப்படுகிறது.

இடுப்பில் இருந்து முழங்கால் வரை ஆடையும், கை புஷங்களில் வீரக்கழல் தண்டியும், காதில் காதணியும் காணப்படுகிறது. மேலும் தலைமுடி கொண்டவையாக கட்டப்பட்டுள்ளது. வீரனின் இடது கால் அருகே சிறிய உருவம் ஒன்று காணப்படுகிறது.

தலைமுடி கொண்டையிட்டு கைகள் கூப்பிய நிலையில் அந்த உருவம் உள்ளது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது பெரிய உருவம் படை தளபதியாகவும், சிறிய உருவம் படை வீரனாகவோ, மனைவியாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சிலையின் மேல் முத்தணன் என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் இந்த பகுதி, மக்கள் வாழ்ந்த நகரமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story