விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி மண்டல்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மாநகராட்சி தகவல்


விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி மண்டல்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 10:53 PM GMT)

விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி மண்டல்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை, 

விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி மண்டல்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி வீதிகளில் ஆயிரக்கணக்கில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். வீடுகளிலும் மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்குகிறது.

இதையொட்டி மண்டல்கள் சார்பில் சாலையோரம் மற்றும் வீதிகளில் பந்தல்கள் அமைத்து விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு மாநகராட்சி, போலீஸ், தீயணைப்புத்துறையிடம் அனுமதி பெறவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதற்காக ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் அனுமதி பெறும் ஒற்றை சாளர நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி, போலீஸ், தீயணைப்புத்துறையிடம் தனித்தனியாக அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், மண்டல்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறையை மாநகராட்சி இப்போதே தொடங்கி விட்டது.

இதன்படி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் மண்டல்கள் மாநகராட்சியின் www.mcgm.gov.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story