அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு கிராம சபை கூட்டம்; ஆணையர் அறிவிப்பு


அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு கிராம சபை கூட்டம்; ஆணையர் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 11:05 PM GMT (Updated: 21 Jun 2019 11:05 PM GMT)

அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது.

அரியாங்குப்பம்,

தமிழகம், புதுவையில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் தற்போது கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் நீர் ஆதாராம் மற்றும் நீர் நிலைகளை பாதுகாத்தல் குறித்து இன்று (சனிக்கிழமை) சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. இது குறித்து பஞ்சாயத்து ஆணையர்கள் ஆறுமுகம் (அரியாங்குப்பம்), மனோகர் (வில்லியனூர்), சவுந்தரராஜன் (பாகூர்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரியாங்குப்பம், அரியாங்குப்பம் (மேற்கு), காக்காயந்தோப்பு, வீராம்பட்டினம், மணவெளி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் காலை 10 நடக்கிறது. தவளக்குப்பம், பூரணாங்குப்பம், ஆண்டியார்பாளையம், நல்லவாடு, அபிஷேகப்பாக்கம், திம்மநாயக்கன் பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.

இந்த கூட்டங்கள் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் தலைமையில், கிராம பஞ்சாயத்தின் அலுவலக செயலாக்க அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது. உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகிறார்.

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லூர், சூரமங்கலம், ஏரிப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், மடுகரை (கிழக்கு), மடுகரை (மேற்கு), ஏம்பலம், செம்பியம்பாளையம், கரியமாணிக்கம், கோர்க்காடு ஆகிய கிராமங்களில் காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

பாகூர், மதிகிருஷ்ணாபுரம், புதுக்குப்பம், மனப்பட்டு, மூர்த்திக்குப்பம், பரிக்கல்பட்டு, சேலியமேடு, குடியிருப்பு பாளையம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், பனித்திட்டு, மணமேடு, கரையாம்புத்தூர், அரங்கனூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டங்களில் கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story