ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்


ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2019 10:15 PM GMT (Updated: 22 Jun 2019 7:12 PM GMT)

ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடுமண், கரம்பை மண், சரள் மற்றும் களிமண் போன்ற சிறுகனிமங்களை விவசாய பயன்பாட்டுக்கும், வீட்டு உபயோகத்துக்கும், மண் பாண்டங்கள் செய்வதற்கும் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது உள்ள உத்தரவின்படி, நன்செய் நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டரும் (அதாவது 25 டிராக்டர் பாரம் மண்), புன்செய் நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டரும் (30 டிராக்டர் பாரம் மண்) எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு ஒருவருக்கு 30 கன மீட்டர் அல்லது 5 லாரி பாரம் மண் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். மண்பாண்டங்கள் செய்வதற்கு ஒருவருக்கு 60 கன மீட்டருக்கு மிகாமல் மண் எடுத்து செல்ல அரசு அனுமதித்துள்ளது. மேலும் மண் எடுத்து செல்ல நபர் ஒருவருக்கு அனுமதி காலம் 20 நாட்களுக்கு மிகாமல், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

எனவே ஈரோடு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்புக்குள் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் மூலமாக மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். உரிய அனுமதி பெற்று இலவசமாக வண்டல் அல்லது கிராவல் மண் எடுத்து விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

Next Story