பிரதான குழாய் உடைப்பு: சேலத்தில் சாலையில் வீணாக ஓடிய தண்ணீர்


பிரதான குழாய் உடைப்பு: சேலத்தில் சாலையில் வீணாக ஓடிய தண்ணீர்
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 6:42 PM GMT)

சேலத்தில் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் வீணாக ஓடியது.

சேலம்,

சேலம் மாநகரில் வசிக்கும் மக்களுக்கு தனி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதி காவிரி ஆற்றில் இருந்து மிதவை மோட்டார்களால் தண்ணீர் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி சேமித்து வைக்கப்படுகிறது.

பெரிய குழாய்கள் நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டு தொட்டில்பட்டியில் இருந்து சேலத்துக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், சேலம் சத்திரம் பகுதியில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் குபுகுபுவென வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது.

அந்த தண்ணீர் அங்குள்ள சாக்கடை கால்வாயில் வீணாக கலந்ததை காணமுடிந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சத்திரம் பகுதிக்கு வந்து பார்த்துவிட்டு, தண்ணீரை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் 8 மணி நேரத்திற்கு மேலாகியும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஓடியது.

இதையடுத்து நேற்று காலையில் தொட்டில்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் தண்ணீர் வினியோகம் செய்யும் குழாய் திடீரென அடைக்கப்பட்டது. பின்னர், சத்திரம் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் தண்ணீருக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாநகரில் 5 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், 8 மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் வீணாக சாலையில் ஓடியது சத்திரம் பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Next Story