கரூரில் ரூ.21 கோடியில் “அம்மா சாலை” பணிகள் அமைச்சர் ஆய்வு


கரூரில் ரூ.21 கோடியில் “அம்மா சாலை” பணிகள் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 7:13 PM GMT)

கரூரில் ரூ.21 கோடியில் அமைக்கப்பட்டு வரும் “அம்மா சாலை“ பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் நகராட்சிக்குட்பட்ட 20 முக்கிய சாலைகளை இணைத்து கரூர் ரெயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை (எண் 7- புறவழிச்சாலை) வரை அமைக்கப்படும் “அம்மா சாலை” பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. குளத்துபாளையம் குகைவழிபாதை அருகே நடக்கும் இந்த பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திற்கு அடுத்து ரூ.6,000 கோடி மதிப்பிலான அந்நிய செலவாணியை ஈட்டித்தந்துகொண்டிருக்கும் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும், பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் இந்த இணைப்புச்சாலை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். 40அடி அகலத்தில் 2.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் 20 அடி மட்டுமே இடம் தர இயலும் என்று அனைவரும் சொன்னார்கள். அனைவரிடத்திலும் இந்த சாலை வருவதால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும், சாலையின் முக்கியத்துவத்தும் குறித்தும் எடுத்துரைத்து அவர்களுக்கு புரிய வைத்து தற்போது 40 அடி அகலத்தில் இந்த சாலை அமையவுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி குறையும்

இந்த அம்மா சாலை அமையவுள்ள நிலங்களில் 90 சதவீத நிலம் தானமாகவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 10 சதவீத நிலம் மட்டுமே கையப்படுத்தும் சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் கோவை சாலையில் சுமார் 40 சதவீத போக்குவரத்து நெருக்கடி குறையும். குறிப்பாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகமாக இருக்கக்கூடிய ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், காமராஜபுரம், வையாபுரிநகர் பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்ல கோவை சாலையில் மட்டுமே செல்ல இயலும். அம்மா இணைப்புச்சாலை வந்த பிறகு அந்த போக்குவரத்து நெரிசல் குறையும். குளத்துப்பாளையம் குகைவழிப்பாலமும் இந்த இணைப்புச்சாலையில் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அம்மா சாலை பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story